ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டனர்.!
Written By We Are Anonymous on Monday, January 23, 2017
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.
பொலிஸாரின் வேண்டுகோளை ஏற்க மறுத்த இளைஞர்கள், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நிரந்தர சட்டம் இயற்றும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம், போராட்டம் தொடரும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் போராட்டக்காரர்களை நோக்கி முன்னேறிச் சென்ற பொலிஸார், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
இளைஞர்களை ஆண் பொலிஸாரும், பெண்களை மகளிர் பொலிஸாரும் எழுப்பி அழைத்துச் சென்ற காட்சிகளை காண முடிந்தது. போலிஸாரின் நடவடிக்கையை தொடர்ந்து, சிறிது நேரத்துக்கு முன்னர்வரை போராட்டக்களமாக காட்சியளித்த வ.உ.சி. மைதானம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
மீண்டும் அந்த இடத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துவிடாதபடி பலத்த பொலிஸ் போடப்பட்டுள்ளது.
இதேபோல், வேலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகை, சீர்காழியில் போராடியவர்களையும் பொலிஸார்; வெளியேற்றினர்
காஞ்சி நகரில் வணிகர் வீதி பகுதியில் நடந்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி நீதிமன்றம் அருகே நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கும்பகோணத்தில் நடைபெற்று வந்த போராட்டமும் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா - தமிழ்நாடு எல்லைப்பகுதியான திருத்தணியில் பொலிஸாரின்; கோரிக்கையை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.
ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டனர்.!
2017-01-23T02:24:00-08:00
We Are Anonymous
India News|





