மு.கா.வின் பேராளர் மாநாடு நாளை : உத்தியோகபூர்வ செயலாளராக ஹஸன் அலி
Written By We Are Anonymous on Friday, February 10, 2017
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகத்திற்கு முன்னையதைப்போல் சகல அதி காரங்களையும் வழங்கும் வகையில் கட்சியின் யாப்பில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. அந்த யாப்பு திருத்தம் நாளை நடைபெறவுள்ள கட்சியின் பேராளர் மாநாட்டின்போது மேற்கொள்ளப்படவுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு நாளை காலை 9.30 மணிக்கு கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அம்மாநாட்டில் நாடு தழுவிய ரீதியிலிருந்து வருகை தரும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன் நாளைய பேராளர் மாநாடு தீர்க்கமான ஒன்றாக அமையவுள்ளது. ஏனெனில் கட்சியில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் உத்தியோகபூர்வ செயலாளர் தொடர்பில் முக்கிய தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது. இறுதியாக நடந்த பேராளர் மாநாட்டின்போது கட்சியின் உயர்பீடச்செயலாளர் பதவி ஒன்று உருவாக்கப்பட்டது. எனவே கட்சியின் செயலாளர் நாயகத்தின் அதிகாரங்கள் உயர்பீடச்செயலாளருக்கு பகிரப்பட்டு செயலாளர் நாயகத்தின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் குறித்த விடயத்தில் கட்சியின் தலைவருக்கும் செயலாளர் நாயகத்திற்குமிடையில் இழுபறி நிலை ஏற்பட்டதுடன் அப்பிரச்சினை சுயாதீன் தேர்தல் ஆணைக்குழு வரையில் சென்றது. எனவே செயலாளர் விவகாரத்தில் மாற்றம் மேற்கொள்ள வேண்டுமாயின் அது பேராளர் மாநாட்டில் நிறைவேற்றப்படும் யாப்பு திருத்தத்தின் மூலமே அதனைச் செய்ய வேண்டும் என தலைவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆகவே நாளைய பேராளர் மாநாட்டின் போது செயலாளர் நாயகத்திற்கு முன்னையதைப்போல் முழு அதிகாரம் வழங்கும் நோக்கில் யாப்பு திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் பேராளர் மாநாட்டில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உறுப்பினர்கள் ஒப்புதல் பெறப்படவுள்ளது. இதேவேளை கட்சியின் கட்டாய உயர்பீடக்கூட்டம் இன்று மாலை கட்சியின் உயர்பீடமான தாருஸ்ஸலாத்தில் நடைபெறவுள்ளது. அதன்போது நாளைய பேராளர் மாநாட்டில் முன்வைக்கவுள்ள முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது
மு.கா.வின் பேராளர் மாநாடு நாளை : உத்தியோகபூர்வ செயலாளராக ஹஸன் அலி
2017-02-10T23:54:00-08:00
We Are Anonymous
Local News|






