Total Pageviews

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து சாய்ந்தமருதில் துஆ பிராத்தனை !!

Written By ADMIN on Monday, April 20, 2020



நூருள் ஹுதா உமர்.

கடந்த ஆண்டு இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கான நினைவு துஆ பிராத்தனை நிகழ்வு இன்று (21.04.2020) காலை சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் பிரதம இமாம் எம்.ஐ. ஆதாம்பாவா (ரஸாதி) அவர்கள் பிரதம உரையையும், துஆ பிராத்தனையையும் நிகழ்த்தினார். மேலும் இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல்  செயலாளர்,பொருளாளர், நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள் (Sri Lanka Easter bombings) 2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று இலங்கையின்  தலைநகர் கொழும்பு உட்பட மூன்று நகரங்களில் இடம்பெற்றன. மூன்று கிறிஸ்தவக் தேவாலயங்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் இத்தொடர் குண்டுவெடிப்புகள் காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் நிகழ்ந்தன. 39 வெளிநாட்டவர்கள் உட்பட 250 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் உயிர்ப்பு ஞாயிறு திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்ற போது குண்டுகள் வெடித்தன. ஏனைய குண்டுகள் கொழும்பின் நடுப்பகுதியில் அமைந்திருந்த சங்கிரி-லா உணவகம், சினமன் கிராண்ட் உணவகம், கிங்சுபரி உணவகம் ஆகிய மூன்று ஐந்து-நட்சத்திர உணவுவிடுதிகளில் வெடித்தன. இத்தாக்குதல்கள் தொடர்பாக பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் பலரும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

இத்தாக்குதல் நடைபெற்று சில தினங்களின் பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் ஒழிந்திருந்த தீவிரவாத குழுவை பற்றிய தகவல்களை அப்பிரதேச மக்கள் பாதுகாப்பு படைக்கு வழங்கி நாட்டில் மற்றுமொரு தீவிரிவாத செயல் நடைபெறாமல் தடுத்திருந்தனர். அப்போது இலங்கை பாதுகாப்பு படைக்கும் தீவிரவாத கும்பலுக்கும் இடையில் நடைபெற்ற சண்டையில் சாய்ந்தமருதை சேர்ந்த அப்பாவி இளம் பெண்ணொருவரும் பலியாகியிருந்தமை குறிப்பிடதக்கது.

Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.